Wednesday, 8 January 2025

மீண்டும் புன்னகை

ஒரு பறவையின் கூட்டில் சிறிது காலம் வாடகைக்கு வசித்த 
நினைவுகளில் நீள்கிறது 
எஞ்சிய என் நாட்கள்.

விடிந்ததும் பறந்துவிடும், 
அந்தப் பறவையின் வாசமும்
அது உதிர்த்துவிட்டுப் போன சிறகும்
கூட்டின் கதகதப்பும் 
என் காத்திருப்புகளைக் 
கவிதைகளாக்கிய அதிசயத்தை 
அந்த பறவை அறிந்திருக்க வாய்ப்பில்லை!

காற்றில் ஆடும் அதன் கூட்டின்
ஒரு மூலையில், என் உயிரின் ஒருதுளி
இன்னும் ஒட்டிக்கொண்டு 
ஊஞ்சலாடும் இரகசியத்தை 
அந்தப் பறவை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை!

சூரியன் மறையும் போது கூடுதிரும்பும்
அந்தப் பறவையின் பரவசமும் 
அதன் ஆர்ப்பரிக்கும் குரலும் ரசிக்க வேண்டியே நாளெல்லாம் அந்த கூட்டில் 
நான் காத்திருந்த தருணங்களை 
அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

தன் பழைய கூட்டைத் துறந்து
எங்கோ தொலைதூரத்தில்
வேறு கூடுகட்டி குடிபெயர்ந்து விட்ட
அந்தப் பறவைக்காகக் காத்திருந்து களைத்துப்போன என் கண்கள்
தானாக மூடிக்கொண்டபின்,

அந்தப் பறவையின் கூட்டில் சிறிது காலம் வாடகைக்கு வசித்த நினைவுகளால், 
இருகிய முகத்தில் 
மீண்டும் இழைகிறது புன்னகை...!


No comments:

Post a Comment