சில பொழுது
இடி முழக்கங்களும்
புயலின் பேரிரைச்சலுமாய்
பூமியதிரப் புன்னகைக்கிறாய்!
பெரும்பாலும்
வருவது போல் பாசாங்கு செய்து
வானெல்லாம் மாயை காட்டி - வராமலே
மின்னலாய் கண் சிமிட்டுகிறாய்!
ஆனாலும் அவ்வப்போது
ஆரவாரமில்லாமல் தூறலாய் வந்து
அங்கங்கே மென்மையாய் முத்தமிட்டு
என் தேகம் குளிர்விக்கிறாய்!
எப்போதாவது கோபம் கொண்டு
என் உள்ளம் வாடப்
பாராமுகம் காட்டி - வெளிரிய
வானமாய் முரைக்கிறாய்!
என் மழையானவனே, இது
உனக்காகத்
தவம் கிடக்கும் இந்த
மண்ணின் மடல்.
உன் வருகைக்கு ஏங்கி
வானம் நோக்கித்
தாகம் தேக்கி காத்திருக்கும்
பூமிப் பெண்ணின் மடல்!
இறங்கி வருவதில் ஏனிந்த தயக்கம்
வரும் வழியில் திரிசங்கு சொர்க்கமேதும்
அந்தரத்தில் உள்ளதோ
அதன் பொருட்டு தாமதமோ?
ஆகட்டும்.
ஆனால் நீ எங்கு விழுந்தாலும்
என்னையே வந்து சேர்வாய் என்பது
புவியீர்ப்பு விதி...
இடையில் ஏதும்
இடையூறு நேர்ந்தாலும்
மண்ணைச் சேர்வதே
மழையின் தன்மை!
மறந்துவிடாதே, மறுக்க முடியாது
உன்னால் என்னை.
No comments:
Post a Comment