Thursday, 10 May 2012

ஒற்றை மழைத்துளி

என் ஒற்றை மழைத்துளி நீ!
கடலின் மேல் மட்டத்தில்
உனக்காக வாய்திறந்து மிதக்கும்
சின்னஞ்சிறு சிப்பி நான்...


சில பொழுது கிடைத்துவிடுகிறாய்
பல முறை தவறவிடுகிறேன் உன்னை...
உன்னை ஏந்திகொள்வது
ஒருவகையில் உறுத்தல் தான்


இருப்பினும்,
மழைநீரின் உறுத்தலில் தான்
உமிழ்நீர் சுரக்குமாம்  -
முத்தும் பிறக்குமாம்.


சிப்பிகள்
தான் பெற்ற மழைத்துளியை
தானாய் உமிழ்ந்ததாய் - இதுவரை
கேட்டதில்லை நான்!


என்னில் நீ விழுந்த மறுநொடி
காலடியில் மணல் பரப்பும்
தலைக்குமேல் தண்ணீருமாய்
கண் மூடி சிந்திக்க துவங்கிவிடுகிறேன்,


உன்னைச்சுற்றிச் சுற்றியே
ஓராயிரம் கவிதைகள்...


என் நாக்கடியில் சுடும்
ஒற்றை மழைத்துளியில்
ஓராயிரம் முத்துக்கள் தரும்
ஒரே சிப்பி நான்தான் போலும்...


இதோ, இப்போதும் காத்திருக்கிறேன் - 
இந்த விரிந்த கடற்பரப்பில் - என் 
ஒற்றை மழைத் துளியே 
உனக்காக...!

No comments:

Post a Comment